Saturday, July 31, 2010

எரியும் இதயம்.....!!!!!!!!!



பத்திரண்டு வருடங்கள்
பத்திரமாய் காத்த
பதுமையான என் இதயத்தை
பத்தே நொடிகளில்
உனக்குள் இடம்மாற்றியவன்
நீ........

பவித்திரமாய் உள்ளிருந்த
பாசம் முழுவதையும்
பதமாய் உனக்களித்த
பேதை நான்........

பத்திரப்படுத்த தெரியாமல்
உடைத்துவிட்டாய் - என்
கண்ணாடி இதயத்தை...
உன் சுயத்துக்காக
என் சுயத்தை கொன்றுவிட்டாய்.....

இத்தனையும் தெரிந்தும்
சிதறிய இதய சில்லுகள் ஒவ்வொன்றிலும்
உன் புன்னகை முகம் தெரிவதுதான்
வேடிக்கை........

என்
கண்கள் வடிக்கும்
கண்ணீர் துளிகள் நிலத்தில் விழும்
வரிவடிவம் - உன்னுருவம்.....

காதல் இல்லையென்றாலும்
இப்போதும் நாம் காதலர்களாம்....
வேடிக்கையாயில்லை...
என்னையறியாமலேயே எனைப்பார்த்து
கேலியாய் சிரிக்கிறது
என் இதயம்
எரியும் என் இதயம்..........!!!!!!!!!!!!

Friday, July 23, 2010

நீயில்லாத என் தனிமை....!!!!!!!



நான் வாழ்ந்த
இரண்டாம் கருவறை - நீ...
தாயின் கருவறையிலிருந்து
பிரியும் போது வெட்டுப்பட்ட
தொப்புழ் கொடியின் வலியை விட
உன்னிலிருந்து நீங்கும் போதான வலி
ரணமானது.....

கனவுகளை சுமந்திருந்த - என்
கண்கள் இப்போது
கண்ணீரை சுமக்கிறது....

உன் உறவு - என்
உடைமை என்றிருந்த எனக்கு
உன் பெயர் சொல்லக்கூட
உரிமை இல்லையாம்....

எத்தனை காதலர்களை கண்டிருக்கும்
இவ்வுலகம்....
எத்தனை காதல்களை இழந்திருக்கும்
இவ்வுலகம்....
காலத்தின் சுவடுகளில் - நம்
பாதங்களும் பதிந்திருக்கும்...
அதிலாவது நிலைத்திருப்போம்
நாமும்....
நம் காதலும்.......

உன் தனிமைக்கு - நான்
துணை என்றாய்....
இப்போது - நீ
இல்லாததால் - நான்
தனிக்கிறேன்...
கொல்கிறது நீயில்லாத
என் தனிமை.......!!!!!!!!

Saturday, July 17, 2010

வாழ்வு என்றால் என்ன...?????????


வாழ்வுக்கு அர்த்தம் சொல்லுங்கள்
வாழ்ந்து பார்க்கிறேன் - நானும்...

வாழ்வு என்றால் உண்மை - ஆனால்
பொய்மை நிறைந்த உண்மை...

வாழ்வு என்றால் விடுகதை - ஆனால்
விடைதெரியா விடுகதை....

வாழ்வு என்றால் விருட்சம் - ஆனால்
விதைகள் இல்லா விருட்சம்....

வாழ்வு என்றால் வசந்தம் - ஆனால்
வாசம் இல்லா வசந்தம்....

வாழ்வு என்றால் சுவாசம் - ஆனால்
மூர்ச்சையில்லா சுவாசம்....

வாழ்வு என்றால் என்ன...?????????

வாழ்வுக்கு அர்த்தம் சொல்லுங்கள்
வாழ்ந்து பார்க்கிறேன் - நானும்...!!!!!!!!

Thursday, July 15, 2010

காதலின் ரணம்......


உனக்குத் திருமணமாம்
யார் யாரோ சொல்கிறார்கள்....
தயாராக வேண்டிய - நீ
இல்லாமலேயே தயாராகிக் கொண்டிருக்கின்றது
உளக்கான எதிர்பார்ப்புக்கள்....

நேசம் வைத்த நெஞ்சை
நிராகரித்துவிட்டு
துடிக்கத்துடிக்க கொன்றுவிட்டு
எந்த மனதோடு
மணக்கோலம் பூணப்போகிறாய்.....???????

ஏமாற்றங்கள் நிரம்பி வழியும்
வாழ்வு எனத்தெரிந்தும்
அதன் வழியே நீண்டு கொண்டிருக்கிறது - என் பார்வை
உன்னை தேடியபடி...

நீ
கானல் எனத் தெரிந்தும் உன் மேல்
கடலளவு நேசம் வைத்திருக்கிறது இன்னும்
என் நெஞ்சம்....

ஆயிரம் பேர்
ஆறுதல் சொல்லியும்
ஆறவில்லை - உன்னால்
எனக்களிக்கப்பட்ட காயம்.....
அதன் மீது மேலும் மேலும்
காயங்களை திணிக்கிறாய்....
வலித்தாலும் தாங்கிக் கொள்கிறேன்
உன் காயங்களை தாங்கி பழக்கப்பட்டு விட்டது
என் உடலும் மனதும்......

எனக்குள் இருக்கிறது
உன் மீது அளவுகடந்த
கோபம்....
அதே எனக்குள் இருக்கிறது
உன் மீது அதையும் கடந்த
காதல்............!!!!!!!!!!

Wednesday, July 14, 2010

நினைவுகளில் நிறந்த வலி....



நம் காதல் தருணந்களை
மீண்டுமொரு முறை மீட்டிப்பார்க்கிறேன்....

நம் முகங்களில்
அழகான புன்னகை மட்டுமே நிரம்பி வழிந்த
நாட்கள் அவை....
எப்போதும் நம் மனங்களில்
பட்டாம்பூச்சியொன்று வண்ண சிறகடித்து
பறந்துகொண்டே இருக்கும்....

பச்சை புல்வெளியில்
பசுமை நீரோடை சலசலத்தோடும்
பரவசம் எப்போதும் எம்முள்...
அன்னப்பறவை ஒன்று
அழகாய் நடைபோடும்
அமைதியான பாதை நம் பார்வைகள்....
ஆயிரம் வார்த்தைகளையும்
ஜாடையால் காட்டும்
கனவுகளால் நிறைந்தவை நம் கண்கள்......................

உன்னை நீங்கிய பின்னரான இந்நாட்களில்....

சோகத்தை தவிர
வேறெந்த உணர்வையும்
காணமுடிவதில்லை நம் முகங்களில்....
தட்டானின் சிறகுகளை
வலுக்கட்டாயமாக பிய்த்தெறிந்த
வலி நம் மனங்களில்....

பசுமையே இல்லாது
வரட்சியாகிப் போன நம் கால் தடங்கள்....
கனவுகள் கலைத்து
கண்ணீர் மட்டுமே குடியேறிய நம் கண்கள்....

செத்துக்கொண்டே வாழும் பாக்கியம்
யாருக்குக் கிடைக்கும்
நம்மை தவிர.......